20ம் நூற்றாண்டில் தாக்கம் ஏற்படுத்திய எழுத்தாளர்களில் ஒருவர்
ஜார்ஜ் ஆர்வெல். கருத்துத் தெளிவு,மொழியாளுமை, சர்வாதிகாரத்திற்கு எதிரான
நிலைப்பாடு, ஜனநாயக ஆதரவு சமூக அநீதிகளுக்கு எதிரான எதிரான அறச்சீற்றம் போன்றவற்றை
இவரது அனைத்துப் படைப்புகளிலும் காணலாம்.
இந்தியாவில் பிறந்தேன்:
என்னுடைய இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளேயர் (Eric aurthur
Blair). பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் (தற்போதைய பீஹார்) உள்ள
மோதிஹரி (Motihari) என்ற ஊரில் பிறந்தேன். தந்தை, ரிச்சர்ட் வார்ம்ஸ்லி பிளேயர்
(Richard warmsley Blair), பிரிட்டிஷ் இந்தியக் குடிமைப்பணித் துறையில்
பணிபுரிந்தார். எனக்கு ஒரு வயது ஆகும்போது அம்மா, சகோதரியுடன் இங்கிலாந்து
வந்துவிட்டோம்.நான்கு வயதிலேயே கவிதை எழுதினேன். பதினோரு வயதில் நாளிதழில்
வெளியானது. சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்பது என் கனவு. மீன் பிடிப்பது, பறவைகளை
ரசிப்பது பிடித்த பொழுதுபோக்கு.
கல்வி:
நான் செயின்ட் சைபீரியன் பள்ளியில் ஆரம்பக் கல்வியில்
சேர்ந்தேன். விடுதியில் தங்கியிருந்த எனக்கு, அந்தச் சூழல் பிடிக்கவில்லை. ஆனால்,
கல்வியில் சிறந்த மாணவனாக இருந்தேன். நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் எனக்கு
உயர்கல்விக்கான உதவித்தொகை கிடைத்தது.ஏடன் கல்லூரியில் 1917இல் சேர்ந்தேன். அங்கு
சரியாகப் படிக்கவில்லை. உயர்கல்வியை முடிக்காத நிலையில், 1921இல் படிப்பைக்
கைவிட்டேன்.
காவல்துறையில் பணி:
இந்திய இம்பீரியல் காவல்படைக்கு (Indian imperial polive
force) தேர்வாகி வேலையில் சேர்ந்தேன். பர்மாவில் பணியமர்த்தப்பட்டேன் ஐந்து
ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்தேன். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் 1937இல் வேலையை
ராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்து வந்ததும், முழுநேர எழுத்தாளராக ஆகிவிட்டேன்.
நாவல், கட்டுரை, விமர்சனம் என பலவும் எழுதினேன். தன்னார்வ பத்திரிக்கையாளராகவும்
பல பத்திரிக்கைகளில் எழுதி வந்தேன்.
புனைபெயர்:
என்னுடைய எழுத்து அரசாங்க அடக்குமுறையை எதிர்ப்பாதாகவே
இருந்தது. நான் ஜனநாயகம், பொதுவுடைமையில் நம்பிக்கை கொண்டவன். என்னுடைய
படைப்புகளால், குடும்பத்தினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஜார்ஜ் ஆர்வெல்
என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினேன். வறியவர்களைப் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய,
என் முதல் புத்தகம் ‘ Down and Out in Paris and London’ 1933ல் வெளியானது.
இரண்டாவது புத்தகமான ‘Burmese Days’ நாவல் 1934இல் வெளியானது. இந்தியாவில்
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தைப் பற்றி அதில் எழுதினேன். 1936இல் எனக்குத் திருமணம்
ஆனது. அதே ஆண்டில் ஸ்பானிஷ் போரில் பங்கேற்றேன். கையிலும் தொண்டையிலும் காயம்
ஏற்பட்டது. 1938இல் தாக்கிய காசநோய், வாழ்நாள் முழுக்க வதைத்தது.
பேரும் புகழும்:
‘பி.பி.சி.’ (BBC) நிறுவனத்தில் 1941இல் வேலைக்குச் சேர்ந்து,
1943ல் ராஜினாமா செய்துவிட்டேன். என் மூன்றாவது நாவல் விலங்குப் பண்ணை 1945ல்
வெளியானது. சோவியத் எதிர்ப்பு மனநிலையை இந்த நாவலில் நையாண்டியாகச்
சித்தரித்திருந்தேன். இரண்டு பன்றிகள்தான் இந்தக் கதையில் வரும் முக்கியக்
கதாபத்திரங்கள். பன்றியைக் குறியீடாக வைத்து, சோவியத் அரசியல்வாதிகளான லியோன்
டிராட்ஸ்கி, ஜோசப் ஸ்டாலின் ஆகிய இருவரின் அதிகாரப்போக்கைக் கிண்டலடித்து எழுதியிருந்தேன்.
இந்த நாவல், எனக்கு அதிகப் புகழையும், பணத்தையும் ஈட்டித் தந்தது.
”நம் காலத்தில் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.
எல்லா
பிரச்சனைகளும் அரசியல் கொண்டவை.
பெரும் பொய்கள், எச்சரிக்கைகள், முட்டாள்தனங்கள்,
வெறுப்பு, மூளைக்கோறுகள்
நிறைந்ததே அரசியல்”
‘Nineteen Eighty Four’ என்ற அடுத்த நாவல் 1949இல் வெளியானது.
பின்னர் ‘1984’ என்ற தலைப்பில் வெளிவந்தது. மனிதர்களின் சிந்தனை உட்பட,
அனைத்தையும் எப்படி அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது என்பதை இந்த நாவலில்
எழுதியிருந்தேன். இந்தப் புத்தகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நன்றி: பட்டம்