அதிகாரபூர்வமான அரசுப் பதவி எதையும் வகித்ததில்லை. ஆயுதம் எதையும் தரித்ததில்லை. பண பலம், படை பலம் இரண்டும் இல்லை. இருந்தும் அந்த மெலிந்த, எளிமையான இளம் வழக்கறிஞரின் பின்னால் ஒரு தேசமே அணிதிரண்டு நின்றது.
காந்தி தன்னைக் கண்டறிந்தது தென்னாப்பிரிக்காவில். பிற்-காலத்-தில் வெற்றிகரமாக அவர் பிரயோகித்த போராட்ட வழிமுறையை அவர் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டறிந்து, கூர்தீட்டிக்கொண்டார். காந்தியின் அரசியல் சிந்தனைகள், மதம் பற்றிய பார்வை, அறம் சார்ந்த விழுமியங்கள் என அனைத்துக்குமான அடிப்படைகள் தென்னாப்பிரிக்காவில் உருப்பெற்றுவிட்டன.
காந்தி குறித்து இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் அனைத்-திலுமிருந்து குஹாவின் இந்தப் புத்தகம் மாறுபடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களிலிருந்து பல புதிய ஆதாரங்களைத் திரட்டி மிக விரிவான ஒரு தளத்தில் ஒருங்கிணைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக காந்தி பிற்காலத்தில் தொடுத்த போருக்கான ஆதாரப்புள்ளி தென்னாப்பிரிக்காதான் என்பதை ராமச்சந்திர குஹா அசாதாரணமான முறையில் இதில் நிறுவியுள்ளார். காந்தியின் அரசியல் வாழ்வோடு அதிகம் அறியப்படாத அவருடைய தனிப்பட்ட வாழ்வும் பிரம்மாண்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகளில் இல்லாத பல அரிய தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகளைப் பெற்றிருக்கும் ராமச்சந்திர குஹாவின் Gandhi Before India நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது.




Reviews
There are no reviews yet.